35,847 தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை - Seithisudar

Sunday, September 17, 2023

35,847 தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை

 



தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் கற்றலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் ஆசிரியர்கள் திறம்பட செயல்படும் வகையில் பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் 2023-24ஆம் நிதியாண்டில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அவர்களது பணிகளை திறம்பட முன்னெடுத்து செல்ல வேண்டும். பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு


தங்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இதற்காக ஓராண்டில் 6,000 தலைமை ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படும். மாநிலம் முழுவதும் மொத்தம் 35,847 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பயன்பெறுவர். இதற்காக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.


தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி


இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு முதல்கட்ட ஏற்பாடுகள் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஒரு மாவட்டத்திற்கு 10 பேர் வீதம் தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக நடுநிலைப் பள்ளிகளில் அதிக மாணவர்களை கொண்டிருக்கும் பள்ளிகளில் இருந்து தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது 250 தலைமை ஆசிரியர்களுக்கு மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள பில்லர் வளாகத்தில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் ஏற்பாடு


மொத்தம் 5 குழுக்களாக 250 தலைமை ஆசிரியர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் தலா 50 தலைமை ஆசிரியர்கள் இடம்பெறுவர். முதல் 3 குழுக்களுக்கு வரும் செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். 4, 5வது குழுக்களுக்கு வரும் அக்டோபர் 3, 4 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.


7 மணிக்குள் வர வேண்டும்


இந்த பயிற்சியை அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து வழங்குகின்றன. உண்டு உறைவிடப் பயிற்சியாக இரண்டு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே தேர்வு செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்கள் பயிற்சி தொடங்கும் நாளிற்கு ஒருநாள் முன்னதாக வர வேண்டும். அதாவது முந்தைய நாள் மாலை 7 மணிக்குள் பயிற்சி மையத்திற்கு வருகை புரிய வேண்டும். வெளியே செல்ல அனுமதி இல்லை


திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெறும் நாட்களில் பயிற்சி மையத்தை விட்டு வெளியே செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது எனக் கூறப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் பயிற்சி முடிவடைந்த பின்னர், மாலை 6 மணிக்கு பிறகே பயிற்சி வளாகத்தை விட்டு செல்ல அனுமதிக்கப்படுவர். பலரும் வெளியூரில் இருந்து வருவதால் தங்கும் வசதி, உணவு ஆகியவை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு


இந்த பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் உரிய தகவல் தெரிவிக்கப்பட்டு பயிற்சியில் தவறாமல் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்கும் வகையில் அவர்களை பணியில் இருந்து விடுவிக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தலைமை ஆசிரியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot