அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் - Seithisudar

Monday, October 30, 2023

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

 



நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் பயின்று தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனத்தில்(நிப்டெம்) சேர்ந்துள்ள மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிப்டெம் இயக்குநர் வி.பழனிமுத்து வரவேற்றார்.


விழாவில், அரசுப் பள்ளியில் படித்து இந்நிறுவனத்தில் சேர்ந்துள்ள 13 பேருக்கு லேப்டாப்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.


பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


தமிழக அரசின் மாதிரி பள்ளித் திட்டத்தின் மூலம், கடந்த 2 ஆண்டுகளில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த பல மாணவர்கள் என்ஐடி, ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு லேப்டாப்களை வழங்கி வருகிறோம். இத்திட்டத்தை இன்னும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.


நிதிநிலை சரியான பிறகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டாலும், 6,218 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வகங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றார்.


இந்த விழாவில் அரசு மாதிரி பள்ளிகளின் உறுப்பினர்- செயலர் இரா.சுதன், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், மேயர் சண். ராமநாதன், முதன்மைக் கல்வி அலுவலர் இரா.மதன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தேசிய சட்டப் பள்ளியில்...


தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படித்து, திருச்சி நவலூர் குட்டப்பட்டில் இயங்கி வரும் மத்திய அரசின் தேசிய சட்டப் பள்ளி, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றில் படிக்கும் 17 மாணவ, மாணவிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துரையாடும் நிகழ்ச்சி தேசிய சட்டப் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.


அப்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கியுள்ள மாவட்டம் இல்லை என்கிற நிலை இன்று உருவாகி உள்ளது. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் மாணவர்களுக்காக 51 திட்டங்களை பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தி உள்ளோம்.


தற்போது ஒரு மாவட்டத்துக்கு ஒரு மாதிரி பள்ளி இருப்பதுபோல, நாளை ஒரு தொகுதிக்கு ஒரு மாதிரி பள்ளியை உருவாக்கவும், தொடர்ந்து அனைத்து பள்ளிகளையும் மாதிரி பள்ளிகளாக மாற்றுவதற்கான ஏற்பாட்டையும் தொடங்கியுள்ளோம்” என்றார்.


இதில், ரங்கம் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.நாகராஜ், பதிவாளர் எஸ்.எம்.பாலகிருஷ்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot