கைது செய்த ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்: பழனிசாமி கோரிக்கை - Seithisudar

Thursday, October 5, 2023

கைது செய்த ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்: பழனிசாமி கோரிக்கை

 




சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களை இன்று (அக்.,05) காலை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எதிர்கட்சியாக இருக்கும்பொழுது ஒரு பேச்சு, ஆளும் கட்சியான பிறகு மற்றொரு பேச்சு என்ற கொள்கையை கொண்டிருப்பவர் முதல்வர் ஸ்டாலின். பல்வேறு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடித்த நீங்கள் (ஸ்டாலின்) 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின்போது திமுக வெளியிட்ட 311வது மற்றும் 181ம் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கடந்த 9 நாட்களாக அமைதியான ஜனநாயக முறையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.


அவர்கள் போராட்டத்தில் வைக்கப்பட்ட நீங்கள் கொடுத்த 311 மற்றும் 181வது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும், வன்மையாக கண்டிக்கிறேன்.


100 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன் என்று பொய்யை சிறு தயக்கம் கூட இல்லாமல் மக்களிடம் கூறி ஏமாற்ற முயற்சிக்கிறார் திமுக முதல்வர் ஸ்டாலின். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், ஆசிரியர்களுக்கு தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot