Ad Code

Responsive Advertisement

Headlines

10/recent/ticker-posts

பகுதிநேர ஆசிரியர்களை திமுக அரசு கைவிடாது : அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!

 



அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2012ஆம் ஆண்டு பகுதிநேர ஆசிரியர்கள் பணிக்கு நியமனம் செய்யப்பட்டனர். 12,000 ரூபாய் என்கிற சொற்ப ஊதியத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன.


தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த சில ஆண்டுகளில் பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சென்னையில் காலவரையற்ற போராட்டமும் நடத்திய பகுதி நேர ஆசிரியர்கள், அரசின் உத்தரவாதத்தை ஏற்று அதனை கைவிட்டனர்.


இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறும் ஒவ்வொரு போராட்டத்தின் போதும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உறுதியளிப்பதாகவும், ஆனால், அதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி ஆசிரியர்களை அலைக்கழிப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று குற்றம்சாட்டினர்.


இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “பகுதி நேர ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். தற்போது கூட மாநாடு நடத்த வேண்டும் என வந்து பேசியுள்ளனர். அவர்களின் கோரிக்கைகள் முதல்வருக்கு தெரியும். அதனால்தான் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தினோம்.. வயது வரம்பை உயர்த்தினோம். தற்போது உள்ள நிதி நெருக்கடியில் 10,000க்கும் மேற்பட்டோருக்கு ரூ.2500 நிதியை உயர்த்தி வழங்கியுள்ளோம். ஆகவே, பகுதி நேர ஆசிரியர்களை நாங்கள் கைவிடமாட்டோம்” என்று தெரிவித்தார்.


தொடர்ந்து, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் 2500 தலைமை ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பாக நீதிமன்றத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று அவரிடம் விளக்கினோம்.


அவை எல்லாம் பதவி உயர்வுக்கான வழக்குகள். அதாவது பதவி உயர்வுக்கான விதிகளில் டெட் தேர்வை எடுத்துக்கொள்கிறீர்களா அல்லது சீனியாரிட்டியை எடுத்துக்கொள்கிறீர்களா என்பதுதான் அந்த வழக்குகள். அரசைப் பொறுத்தவரை சீனியாரிட்டியை எடுத்துக்கொள்ள வேண்டும் என வாதம் வைத்துள்ளோம். ஆனால், வழக்கு இதுவரை விசாரணைக்கே வரவில்லை.


ஜூன், ஜூலை மாதம் வரும் என்று சொன்னார்கள்.. இப்போது நவம்பர் 13ஆம் தேதிக்குப் பிறகு விசாரணைக்கு வரும் என்று சொல்கிறார்கள். நல்ல தீர்ப்பாக அது வந்துவிட்டால் பள்ளிக் கல்வித் துறை சம்பந்தமான 30 சதவிகித வழக்குகள் முடிவுக்கு வந்துவிடும்” என்று தெரிவித்தார்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement