ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனம் இல்லையா? - நயினார் நாகேந்திரன் - Seithisudar

Tuesday, June 3, 2025

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனம் இல்லையா? - நயினார் நாகேந்திரன்

 



பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு மனமில்லை என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.


கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அரசுப் பள்ளிகளில உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பாமல், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்குமாறு தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.


தமிழகத்தில் காலியாக உள்ள 6553 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு ஆணையம் கடந்த 2023-2024ம் ஆண்டு தேர்வு நடத்தியது. அதில் வெற்றி பெற்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணி நியமனம் வேண்டி காத்துக் கிடக்கிறார்கள் என்பதையும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி எண் 177ன் படி அவர்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும் என்பதையும் சரியாக ஒரு மாதத்திற்கு முன்பே தமிழக பா.ஜ., சார்பில் நான் சுட்டிக் காட்டி இருந்தேன்.


ஆக, அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடமும் அதற்கு தகுதியான ஆசிரியர்களும் தயாராக உள்ள நிலையில் அவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில அரசுக்கு என்ன சிக்கல்? மாணவர்களின் எதிர்காலம் மீதும், ஆசிரியர்களின் நல்வாழ்வு மீதும் துளியும் அக்கறையில்லாமல், தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிப்பது தான் ஒரு நல்ல நிர்வாகத்திற்கான அழகா?


ஒருவேளை ஒரு போஸ்டிங் போடுவதற்கு இத்தனை லட்சம் ரூபாய் வேண்டும் என்று இதிலும் ஊழல் நடத்த திட்டமா? 50 வயதை கடந்து அரசு ஆணைக்காக காத்திருக்கும் ஆசிரிய பெருமக்களின் கோரிக்கைகளை தனது ஆட்சியின் இறுதி காலத்திலாவது நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு மனமில்லையா?


இவ்வாறு ஆசிரியர்களின் கோரிக்கைகளையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் ஆளும் அறிவாலய அரசு அதற்கான விளைவுகளை வரும் சட்டமன்ற தேர்தல் 2026ல் அறுவடை செய்யும்.


இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot