Ad Code

Responsive Advertisement

Headlines

10/recent/ticker-posts

வட மாவட்டங்களை இன்று நெருங்குது புயல்

 



தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, படிப்படியாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை இன்று நெருங்குகிறது.


இதனால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கை:


தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக விலகிய நிலையில், தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது.


இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டி வருகிறது.


தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுவடைந்து வருகிறது. இது, நேற்று காலை நிலவரப்படி, தமிழகம் நோக்கி மெதுவாக நகர துவங்கியுள்ளது.


இது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று மேற்கு, வடமேற்கு திசையில், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கரையை நெருங்கும்.


தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் வரை, வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.


இந்த நிகழ்வுகளால், வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், 22 செ.மீ.,க்கு மேல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், அரியலுார், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலுார், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், 12 முதல் 21 செ.மீ., வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


இப்பகுதிகளுக்கு, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


நாளை


ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுஉள்ளது.


சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


ரெட் அலர்ட் காரணமாக, சென்னை மற்றும் புறநகரில், ஒரு சில இடங்களில் இன்று, 25 செ.மீ.,க்கு மேல் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட மாவட்ட கடலோர பகுதிகளில் மணிக்கு அதிகபட்சமாக, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


துவங்கியது வடகிழக்கு பருவமழை


தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின், ஆண்டு மழை தேவையில், பெரும் பகுதியை பூர்த்தி செய்யும் வடகிழக்கு பருவமழை துவங்கியள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்ததை விட, பல்வேறு மாநிலங்களில் அதிக மழை பொழிவை கொடுத்துள்ளது. இதில், அக்., 15ல் தென்மேற்கு பருவக்காற்று விலகும் என்றும், அதன்பின் ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்றும்எதிர்பார்க்கப்பட்டது. இதன்படி, அக்., 17 அல்லது 18ல் வடகிழக்கு பருவ மழை துவங்கும் என, நம்பப்பட்டது. ஆனால், அரபிக்கடலில் உருவான நிகழ்வு மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்ட நிகழ்வுகளை இணைக்கும் வகையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சிகள் அடிக்கடி உருவாகின.


இந்நிலையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ள சூழலில், தென்மேற்கு பருவக்காற்று நேற்று விலகியதை அடுத்து, வடகிழக்கு பருவ மழை துவக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.வழக்கமாக, வடகிழக்கு பருவமழை காலத்தில், தமிழகத்தில் சராசரியாக, 44 செ.மீ., மழை பெய்யக்கூடும். இயல்பான அளவை விட, இந்த ஆண்டு கூடுதலாக பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை துறையினர் தெரிவித்தனர்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement